Friday, May 17, 2013

மழை

தொடு வானக் கோணத்திலும்
தொட்டு விடாத வானம்
பூமியை மெய்யாய்த் தொடும்
ஒரே வழி .....
************

வானத்து தேவதைகள்
பூமிக்கு இறங்கி வர
மேகம் தொங்க விட்ட நூலேணி

பேரிகை முழக்கத்துடன்
பெரிய இடத்து தேவதைகள்
இறங்கி வருகின்றன
கண்டவர்கள் கண் பறிக்க
மின்னல் காவலர்களும் ....
*****************

காலுக்கடியில்
கடலின் குட்டி தரிசனம்
காகித கப்பல் முதலாளிகளுக்கு மட்டும்...
**************

பேரிடி சத்தம் கிளப்பிவிட்ட
பயத்தின் போது மட்டும்
கண்ணனையும் மிஞ்சி விடும்
பெருந்தெய்வம் ஆகிவிடுகிறான்
அர்ச்சுனன் ...
*************

சொல்லாமல் வந்த தோழி
எதிர்பாராமல் தந்த ஆனந்தம் போல்
பூரித்துச் சிரித்தது பூமி
பேசி ,சிரித்து , கும்மாளம் போட்டு - பின்
பிரியா விடைத் தந்து
காத்திருக்கிறது
மழையின் அடுத்த வருகைக்காய் ....

Friday, May 10, 2013

ஊமை ஒளி சுடர்


ஒரு தொடுதலில் ஏற்றப்படும்
மின் விளக்குகள் வந்தபின்
எண்ணெய் ஊற்றி,
திரியை ஊற வைத்து
காத்திருக்கத் தேவை இல்லை...

புளி சக்கை சேர்த்து வைத்து
விளக்குத் தேய்க்கத் தேவை இல்லை...

திருக்கார்த்திகைக்குக் கூட
அகல் விளக்குகள் அகற்றப்பட்டு விட்டன.
கூடைக்குள் அடைக்கப்பட்ட
மெழுகு வர்த்திகள் தோற்றுவிட்டன
சீரியல் விளக்கு தோரணத்தின் முன்...

கடவுள் படத்திற்க்குக் கீழ்
அணையா விளக்குகள்
சுடரின் அசைவுகளையும்
இயந்திரமாக்கி விட்டன..

தீபச் சுடரைச் சுற்றும்
விட்டில்கள் மட்டும்
இன்னும் தேடுகின்றன
உண்மை தீபங்களை...